விடுதலை

எழுத்தல்ல பேச்சல்ல செயல் செயல் செயலே விடுதலை

தமிழ்த்தேசத்தின் கடிதம்

with one comment

அன்புள்ள இந்தியாவுக்கு,

சில செய்திகளை வெளிப்படையாகப்

பேசிவிடுவது நல்லது.

குருதியும் கண்ணீரும் கலந்தோடும்

எம் வரலாறில்

உன்னோடு ஆற அமர

அமர்ந்துபேச

பிறிதொரு பொழுதில்

வாய்ப்பே இல்லாது போகலாம்.

 

உன் சினம் பொங்கும் துவக்குகளும்

வெறுப்புமிழும் பீரங்கிகளும்

எனக்கே எனக்கான கைகளும்பேசத் தொடங்கும் முன்

பேசிவிடலாம்தானே!

 

தொன்றுதொட்டு இருந்து வரும் பழம்பெரும் பாரதம்

இது என்றாய்.

நாம் எல்லோரும் இந்து என்றாய்.

ஆகஸ்ட் பதினைந்து சனவரி இருபத்தாறு என

தொடர்ச்சியின் இழை அறுபடாது

வீரியமான போதையூட்டினாய்.

 

உன் நாடாளுமன்ற வித்தைகளில்

மெய்மறக்கவைத்தாய்.

உன் நிர்வாக ஒழுங்கு முறைகளில்

சட்டம்-ஒழுங்கு சொல்லிக்கொடுத்தாய்

நீ

சமைத்த மனுநீதிமன்றங்களில்

சிதறிக் கிடைத்த

சிறுபருக்கைகளின் உள்நஞ்சு சுவைத்து

சிலிர்த்துத்தான் போனோம்.

 

கோடிகோடியாய் செலவழித்து

காசுமீர் நாகா அசாம் மணிப்பூர் என

தேசபக்தி நாடகங்களை

நிதமும் நிதமும் நடத்திக்காட்டினாய்.

 

உன் விந்தில் உயிர்த்து

உன் நிழலில் முளைத்து

உன் ஊட்டத்தில் செழித்த

உனக்கே உனக்கான குரல்களை

என் பரப்பெங்கும் பயிர்செய்தாய்.

 

அடிமை அடிமைத்தனம் என சில சொற்களின்

பொருளறியா என் பேரறிவை

நீயே அருளினாய்.

 

நிலமெங்கும் நஞ்சு சுரக்க

மூர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது

என் உழவு.

 

கரியமில வளர்ச்சிகளில்

பேரார்வம் மிக்க உன்னால்

இதோ மட்கிப்போகத் தெரியாத பிளாஸ்டிக் தாள்களாய்

என் சூழல்.

 

பூச்சிக்கொல்லிகளை குளிர்பானமாகப்

பயிற்றுவித்த உன் நவீனத்தில்

முல்லைப்பெரியாறு காவிரி பாலாறு எல்லாம்

தமிழின் கெட்டவார்த்தைகளாய்

அறிவித்தாய்.

 

மொழியின் அடியாழத்தில் படிந்திருக்கும்

தேசஉணர்வுப் படிவுகளை

இந்தியால் நிதமும் ஆங்கிலத்தால் அவ்வப்பொழுதும்

மெல்ல மெல்லத் துடைத்து

இவ்வடிமை மனப்பரப்பில் சுண்ணாம்பு பூசினாய்.

 

மனிதப் பரிணாமத்தை அனுமதித்த

இயற்கையின்மீதே வன்மம் கொள்ளவைக்கும்

ஒப்பீடில்லாச் சமூக முறைமை

உனக்கின்றி யாருக்கு வாய்த்தது.?

 

ஏறத்தாழ மனிதர்களாய் வாழவும்

உன் அகன்று கிடக்கும் வேத உபநிடதங்களின் பெரும் பரப்பு

அனுமதித்ததில்லை.

 

உன் சித்தாந்த வரலாறு….!

நினைக்க நினைக்கக் குடல்புரட்டும்

உன் சொற்கள்…!

அவைகிளைத்த பெருமரங்கள்…!

இம்மண் தின்று நிற்கும் உன் பண்பாட்டுச் சதுப்புக்காடுகள்…! 

உண்மையிலேயே உண்மையிலேயே

நீ ஒப்பீடில்லாதவன்.

 

வா

என் தொலைதூர விடிவெள்ளிக் கனவுகளின்

நேரம் இது.

போகிற போக்கில் புலம்பி

உன் சட்டச் சந்துபொந்துகளின்

சலுகைச் சேற்றின் மணம் புகழ்ந்து….

இல்லை. இல்லவே இல்லை.

 

இது. அதற்கான காலமில்லை.

அடர்ந்து அடர்ந்து கருக்கொண்டு

நெடுநாளைய சினம் சேமித்து

மெல்ல மெல்ல

உன் உயிர்ப்பரப்பில்

தீ தூவும்

திட்டத்தோடுதான் வருகிறேன்.

 

வாழ்க்கைக்கான மெய்விளக்கத்தை

ஒரு உற்சாக விடியலில்

உனக்கும் சேர்த்துக்

கற்றுக்கொடுக்கவே விருப்பம்

வா!

 

நெருப்பீனும் சொற்களும்

நீண்டு துரத்தும் உனக்கான தோல்விகளும்

இறுதியாய் இறுதியாய்

உனக்காகவே நானெழுதும்

முன்தேதியிட்டமுடிவுரையும் என

சில வேட்கைகளோடே வருகிறேன்.

 

 

 

சுற்றிப்பரவும் பெருநெருப்பில்

குளிர்காயும் களிப்போடு காத்திருக்கும்

உனக்கு

உவப்போடு நானளிக்கும் பரிசுகளைப் பெறும்

நேரம் இது.

காத்திரு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Written by இளங்கோவன்

ஜனவரி 4, 2008 இல் 7:38 பிற்பகல்

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது